அதிகாரபூர்வ அறிவிப்பு ! உலக அளவில் ரூ.100 கோடியைத் தாண்டிய "கைதி" வசூல்!
கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டதால், இதர மொழிகளின் ரீமேக் உரிமைக்குக் கடும் போட்டி நிலவி வருகிறது.
எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகி இருந்த இந்த படம் தற்போது வசூலில் ரூ 100 கோடியை தாண்டி ரூ 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸில் இணைந்துள்ளது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
மேலும், சென்னையில் 'பிகில்' திரையிடப்பட்டு வந்த முக்கியத் திரையரங்குகளில் 'கைதி' மாற்றப்பட்டுள்ளதால், படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. சென்னையைத் தாண்டிய பல ஊர்களிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இதனிடையே, 'கைதி' படத்தின் வசூல் தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் விசாரித்தபோது, 2019-ம் ஆண்டில் நல்ல லாபம் கொடுத்த படங்கள் வரிசையில் 'கைதி' இணைந்துவிட்டது என்றனர்.
மேலும், 'கைதி' படத்தின் திரையரங்க டிக்கெட், தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் மூலம் வந்த மொத்த வசூல் சுமார் 110 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் குறிப்பிட்டனர். நல்ல கதை, சரியான பொருட்செலவு, போதிய விளம்பரம் என அனைத்துமே கச்சிதமாக அமைந்த படம் 'கைதி' என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.