ஹீரோ என்றால் விக்ரம் மாதிரி இருக்கணும் ! கமல்ஹாசன்..


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் கடாரம் கொண்டான்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. 

விழாவில் நடிகர் அபிஹாசன் பேசியதாவது,

"என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முதலில் கமல் சாருக்கு நன்றி. விக்ரம் சார் பெரிய ஹீரோ என்பதால் சூட்டிங் போகும் போது ஒருமாதிரி நினைத்துப் போனேன். ஆனால் அவர் மிக உயர்ந்தவர். இயக்குநர் ராஜேஷ் சார் எத்தனை டேக் போனாலும் எனக்குச் சப்போர்ட் பண்ணினார்," என்றார்

நடிகை அக்‌ஷரா ஹாசன் பேசியதாவது,

"அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலைக் கொடுத்தார். ரொம்ப நன்றி," என்றார்

இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது,

"இது என்னோட 25-வது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்பெக்ஷன் ஆக்டர். அவர் படத்திற்கு ரீ ரிங்காடிங் பண்றது ரொம்ப இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி," என்றார்

இயக்குநர் ராஜேஷ் M.செல்வா பேசியதாவது,

"ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். தூங்காவனம் படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார். அதிகநேரம் சூட்டிங் நடந்தால் கமல்சார் திட்டுவார்.

ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம் தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப் படம் கமல் சார் எனக்காகவே தயாரித்தார். இந்தப் படத்தில் வேறு இசை அமைப்பாளரைப் போட்டிருந்தாலும் ஜிப்ரான் வந்து எனக்கி உதவி செய்திருப்பார். அக்‌ஷரா ஹாசன், அபி நடிக்க இருந்ததால் ஒரு பக்கா வொர்க்‌ஷாப் வைக்கலாம் என்று நினைத்தோம். அது சிறப்பாக இருந்தது. தயாரிப்பாளர் ரவீந்தரன் சார் ராஜ்கமல் பிலிமஸோட படம் பண்றோம் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லுவார்.

சியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக்கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டி கூட விட்டிருக்கிறார். ஏன் இந்தப்படத்தில் அக்‌ஷரா நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்," என்றார்

நடிகர் விக்ரம் பேசியதாவது,

"ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன்.

இந்தப் படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டரிஸ்டிங்கான கேரக்டர் பண்ணி இருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப் படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இந்த்ப் படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப் படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்," என்றார்.

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது,

"ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும் போது அக்‌ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம். இந்தக் கம்பெனியை ராஜ்கமல் என்று தான் வைத்தோம். ஆனால் அனந்து தான் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்கியுள்ளாம்.

விக்ரம், சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகி விட்டதே என்று கவலைப்பட்டிருக்கேன். சேது இன்னும் பல காலத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும். கடாரம் கொண்டான் படத்தை நான் பார்த்தேன். கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் ரசிகன். படத்தை மிகவும் என்ஜாய் பண்ணிப் பார்த்தேன்.

ஒரு படத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம்.

கடாரம் கொண்டான் படம் பார்த்தேன். நல்ல நடிகரை பார்த்தால் சக நடிகருக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். விக்ரமுக்காகப் இந்த படத்தை பார்க்க வேண்டும். சீயான் விக்ரமை இனிமேல் கேகே விக்ரம் என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஹீரோ என்றால் விக்ரம் மாதிரி இருக்கணும். புருஷ லட்சணம் மாதிரி. ஹாலிவுட் நடிகர் போல் விக்ரம் இருக்கிறார்.வியாபார ரீதியாக படத்திற்கு என்ன லாபம் வருமோ அது வரும்.

நான் படப்பிடிப்பு நடக்கும் போது எந்தப் பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ். நிச்சயமாக இந்தப் படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும். ராஜ்கமல் நிறுவனம் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு கடாரம் கொண்டான் படமும் ஒரு காரணமாக இருக்கும்.

ஜுலை 19-ஆம் தேதி சந்தோசமான நாள். அன்று கடாரம் கொண்டான் வெளியாகிறது. மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகு பார்ப்பதில்தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி, நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார்.

ரசிகர்கள் நல்ல படத்தைக் கொண்டாட வேண்டும். விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். நிஜமாகவே இது ஆங்கிலப் படம் போலத்தான் இருக்கிறது. . இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது," என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area